search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள்"

    நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. #NEET #CBSE
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 24 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தமிழ் வினாத்தாளில் மொழி பெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதை தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு “நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கருணையாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதோடு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கவுன்சிலிங் நடத்தவும் உத்தரவிட்டது.

    மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ்.இ. சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் நீட் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் இது தொடர்பாக கூறப்பட்டு இருப்பதாவது:-


    நீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம். தமிழக அரசு பரிந்துரை செய்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர்.

    மேலும் 554 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 196 மார்க் கருணை மதிப்பெண்ணாக வழங்கினால் அவரது மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும்.

    மொத்த மதிப்பெண்ணே 720 தான் என்ற நிலையில் கருணை மதிப்பெண்ணாக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் எப்படி தர முடியும்? கருணை மதிப்பெண்ணால் குழப்பம் மட்டுமே ஏற்படும்.

    இவ்வாறு சி.பி.எஸ்.இ. தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

    இதேபோல மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக மாணவர் சத்யா தாக்கல் செய்த மனு மீதும் நாளை விசாரணை நடைபெறும். #NEET #CBSE
    ×